5 தூண்களில் புதிய கல்வி சீர்திருத்தம்
2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் 5 தூண்களில் தொடங்கப்படும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 இல் நடைபெறும் என்று பிரதமர் கூறினார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் 05 முக்கிய தூண்களின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதன்படி, புதிய கலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல், மனித வளங்களை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பொதுமக்களை தெளிவூட்டல் மற்றும் கணிப்பீடு மதிப்பீடு ஆகிய முக்கிய தூண்களின் கீழ், இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதல் முறையாக ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காக அமுல்படுத்துவதற்கான செயற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுடன் இணைக்கப்பட்ட 6 துணைக் குழுக்களை நிறுவுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்படி, கல்வி சீர்திருத்தங்கள், பாடசாலைகளில் மனித மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறை, பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்த்தல், கல்வி கவுன்சில், உயர்கல்வி பிரிவு மற்றும் திறன் கல்விப் பிரிவு ஆகியவற்றை நிறுவுதல் என ஆலோசனைக் குழுவுடன் இணைக்கப்பட்ட 6 துணைக் குழுக்கள் நிறுவப்பட உள்ளன.
தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் இந்த அமைச்சு தொடர்பான விடயங்களும் விவாதிக்கப்பட்டன.
அதன்படி, அமைச்சர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்குப் பதிலளித்த பிரதமர், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு, பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும், பாடசாலைகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த பாடசாலைகளில் பௌதீக ஆய்வுகளை மேற்கொள்ளவும், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டுமானத் திட்டங்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், பாடசாலைகளில் பாதுகாப்பற்ற வளாகங்களைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று மேலும் தெரிவித்தார்.
