அரச அதிகாரிகளின் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனைகள் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் நெருங்கிய ஒருவர், வனவிலங்கு திணைக்கள அதிகாரி ஒருவரை தாக்க முயன்றதை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பகுதியில் உள்ள சரணாலயத்திற்கு காட்டு யானைகளை விரட்டிய வனவிலங்கு துறை அதிகாரி ஒருவரை, நாடாளுமன்ற உறுப்பினரின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் தாக்க முயன்றதாக பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
யானைகளை விரட்ட பயன்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ துப்பாக்கியையும் சந்தேக நபர், வனவிலங்கு திணைக்கள அதிகாரியின் வசம் இருந்து பறிக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அந்த சம்பவங்களின் அடிப்படையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது அதிகாரிகள் செய்யும் கடமைக்கு இடையூறு விளைவிப்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்றும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
